Thursday, 2 May 2013

தூசு...!


                       தூசு...! 




ஏனோ தெரியவில்லை...மனம் எங்கேயும் செல்லாமல் என்னை உற்று நோக்கிக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட தருணங்களில் நான் எப்போதும் நடுங்கிக் கொண்டேதான் இருப்பேன்... ! நானும் தப்பித்து அங்கும் இங்கும் என்று புத்தியை மாற்றி நகர வைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை.....! எங்கே திருப்பினாலும் மீண்டும் திரும்பி என்னை உள்நோக்கி முறைக்கும் மனம் முழுக்க முழுக்க ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிந்தது. 

உற்று நோக்கும் உக்கிரத்தில் நெற்றிக் கண்ணே திறந்து நான் பஸ்பமாகிவிடுவேனோ என்று கூட பயமாயிருக்கிறது. சுற்றி சுற்றி நகரும் வாழ்வில் பெருமைகளும் மமதைகளும் அவ்வப்போது கொள்ளும் மனதை, என் செயல்களுக்கு எல்லாம்...நான் என்ற தனிப்பட்ட உருவம் தான் காரணம் என்று ஆர்ப்பரித்த புத்தியை, உள் முனைப்பு சொல்வதை கேட்காமல் அவ்வப்போது எதிர் பதில்கள் சொல்லி புறத்தில் காய்கள் நகர்த்தி செருப்படி வாங்கி சிதிலமடைந்து ஓய்ந்து கிடக்கும் என்னை எரிக்காமல் என்ன செய்யுமாம் என் உள் முனைப்பு... 

முழுதுமான ஒரு சரிபார்த்தல் துரித கதியில் நடந்து கொண்டிருக்கும் போது, தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டு பிடிக்கப்பட்ட ஓராயிரம் ஓட்டைகளை சரி செய்ய வேண்டிய இடம் தியானம் என்று உணர்ந்து அதற்கான நேரமின்மையை மனம் நியாயப்படுத்திய போது கணிணி முன் கட்டுப்பாடுகளின்றி மன மயக்கத்தில் இல்லாத ஏதோ எல்லாம் இருப்பதாக விவரித்து, பொய் வாழ்க்கையில் நேரம் கழிக்கிறாயே அது என்ன? என்ற கேள்விக்கு முன்னால் மண்டியிட்டு அழத்தொடங்கியிருந்தது மனம்..... 

சம காலத்து நிகழ்வுகள்.... 
நெருப்பாய் நம்மை ... 
கொளுத்தி எரிக்கும் போது 
மாயையில் மழையில் 
நனைகிறேன் என்று எண்ணுவது 
மடத்தனம் தானே? 

கண்களை மூடி ஏதோ ஒரு விருப்பப் பாடலை கேட்டு ரசித்து மெய் மறந்து கண் திறக்கும் போது எதார்த்த வாழ்க்கை எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நிற்கிறதே.... ஏன் இந்த அபத்தம் என்று புரியாமல் நகரும் கூட்டத்தில் நீயும் ஒருவனா? கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் மெளனத்தை சமர்ப்பித்த மனம் என்னை எவ்வளவு ஏமாற்றி விட்டது... என்று மனதை வேறொன்றாக பாவித்து மனமே நினைத்தது. 

எதார்த்ததை எதிர்கொள், நிதர்சனத்தில் கவனம் செலுத்து, எதிரிகளை துவம்சம் செய்.....உனக்கென்று ஒரு கனவுலகமே தேவையில்லை...எப்போதும் ஏகாந்தத்திலிருப்பாய்.....என்றது என் உள் முனைப்பு....! 

" செயல் படு " என்ற ஒற்றை வாக்கியத்தின் விரிவாக்கம் தானே பகவத் கீதை? 

அக்கிரமங்கள் கூடிப் போய், மூட நம்பிக்கைகள் அதிகரித்த போது நிகழ்த்தப்பட்டவைதானே ரசூலல்லாவின் (ஸல்) போர்கள்? செயல்.. செய்யும் போது கற்பனைகள் இல்லைதானே....? ஆனால் கற்பனைகளில் செயல் செய்வதாய் கருதுகிறோமே அது அறியாமையின் உச்சம்தானே? 

செயல் புரி என்ற கட்டளையை கேட்டாலே அலர்ஜியாகிப் போகும் அளவிற்கு புரையோடிப் போய் கிடக்கிறது மனம். நாம்தான் வெற்று அரற்றலிலும், பந்தாவிலும், உலகைத் திருத்தும் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டிருக்கிறோமே? நாம் எப்படி செயல்புரிவது. 

இந்திய அரசியல் அமைப்புச்ச் சட்டத்தையும், அரசியல்வாதிகளின் போக்கையும், தெருவோரம் ஒதுங்கிக்கிடக்கும் சாக்கடையையும் பற்றி வீட்டுக்குள்ளோ அல்லது வசதியான ஒரு இடத்திலோ உட்கார்ந்து உலகில் இருக்கும் தத்துவங்களையும், விதிமுறைககளையும் உதாரணம் காட்டிப் பேசிப் பேசி இந்த உலகம் உருப்படாது என்ற முடிவுக்கு வந்து கருத்தை உமிழ்பவர்களதாமே மனிதர்கள்...... 

என்னுடைய செருப்பில் அழுக்கிருக்கிறதே? அதை துடைத்துப் போட நினைத்திருப்பேனா? நான் தலைவாரும் சீப்பு அழுக்காயிருக்கிறதே அதை சுத்தப்படுத்த என்றாவது எண்ணியிருப்பேனா...? என் வீட்டு தலையணை பெட்சீட் சுத்தமாயிருக்கிறதா? என் வீட்டுச் சுவர் தூய்மையாயிருக்கிறதா.....? வீட்டில் இருக்கும் ஒட்டடை அடித்து வீட்டை பளிச்சென்று வைத்திருக்கிறேனா? அட அது எல்லாம் விடுங்கள்...அன்றாடம் நான் பார்க்கும் கண்ணாடி.........அதை அழகாக துடைத்து வைத்திருக்கிறேனா? தினமும் வீட்டை தூசு தட்டி டஸ்டிங் செய்திருக்கிறேனா.....? எதுவுமே இல்லை 

ஆனால்.... 

உலகம் திருந்த வேண்டும்...என்று ஒப்பாரி வைக்கிறேனே? என்னே மடைமை இது..? 

என் வசதிப்படி நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், எனக்குள் ஆயிரம் அசிங்கங்களை கடை பரப்பி வைத்துக் கொண்டு அதை மறைத்து அழகாக உடுத்தி, நறுமணம் பூசி, வெளியே வந்து பல்லிளித்து ....உலகப்பொதுமுறை எழுதிய வள்ளுவனுக்கே வழிமுறைகள் சொல்வேன்...? அறியாமையா இல்லையா இது..... 

ஒரு தெருவில் வசிக்கும் மனிதன், தெருவில் குப்பைகள் கூளங்கள் கிடந்தால் என்ன செய்யவேண்டும்? தெரியுமா? சரி அதை விட்டுத்தள்ளுவோம் என்ன செய்கிறோம்....தெரியுமா?......இந்தியப் பிரதமரையும், மாநில முதல்வரையும் இன்ன பிற அரசியல்வாதிகளையும் குறை சொல்லிய படியே இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று நாட்டுக்கு நடுவில் நமக்கென்ன என்று நின்று கொண்டு சொல்வோம்..... 

எல்லா வழிமுறைகளும், நெறிகளும் வகுத்தளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அதை பின்பற்ற வக்கற்ற மக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது. தெருவில் குப்பைகள் இருந்தால் நமது தெருவிலேயே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினரிடம் எத்தனை தடவை முறையிட்டு இருப்போம்.....? அவரிடம் சொன்னால் அவர்தானே.. பேருராட்சியில் சொல்லி முட்டி மோதி ஏதாவது செய்ய முனைவார்? 

நாமே மனிதர்களை நமது பிரதிநிதிகளாக்குவோம்.....ஆனால் அவர்களிடம் நேர்மையாக முறையிட்டு செய்து கொடுங்கள் என்று கேட்க மாட்டோம். எடுத்த எடுப்பிலேயே...தமிழ் நாட்டின் தலைமையை குறை சொல்வோம். 

படிநிலைகள் இருக்கின்றனவா இல்லையா? அதன் படி ஏன் அணுகக்கூடாது? நமக்குத்தான் பொறுமையில்லையே.....! நாம்தான் உலக அரசியல் படித்திருக்கிறோமே....? நமக்குத்தான் முற்போக்கு சிந்தனை இருக்கிறதே.. ? நாம்தான் பெரிய.....பெரிய.. தலைகள் கொண்டிருக்கிறோமே?........... 

என்னை போட்டுத் தாளித்துக் கொண்டிருந்த என் உள் முனைப்பு என் முகத்தில் காறி உமிழாதது மட்டுமே குறையாக இருந்தது. அமைதியாய் எல்லாவற்றையும் நான் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆமாம்.. அதிக பிரசங்கித்தனமாய் ஊரில் நடக்கும் பிரச்சினைகளை அந்த அந்த ஊரில் இருக்கும் காவல்துறை தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து நாம் பிரச்சினைகளை தீர்திருக்கிறோமா? இல்லை...........ம்ம்ம்ம் என்றால் மாநில மந்திரி? ம்ஹீம்ம்ம்ம்ம் என்றால் மத்திய மந்திரி..என்று நமது பலத்தை காட்டத்தானே முயன்றிருக்கிறோம்? 

இப்படி குப்பனும், சுப்பனும், மாறனும் முனியாண்டியும்.......தொட்டதுக்கெல்லாம்...சப்போர்ட்டுக்கு ஆள கூப்பிட்டு கூப்பிட்டு....கடையில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப் போக ஒரு காரணமா இருந்து விட்டு.....ஒட்டு மொத்த உலகத்தையும் பழிக்கிறது கேவலமா இல்லையா?........... 

நாலு வரி எழுதி என்னத்த உலகத்தை கிழிக்கப்போறேன்...? பதிவுலகுல இதைப் படிச்சுப்பார்க்க பத்து பேரு வர்றதுக்கே நூறு பேரு எழுதுனதுக்குப் போய் நான்...மொய் எழுதணும்....விளம்பரம் செய்யணும்.....! 

ஆனா இங்க எழுத்துல அப்படியில்லை என்பது ஒரு ஆறுதல் (நல்ல பதிவுகளை வாசிப்பதும், ஊக்குவிப்பதும் எப்போதும் வரவேற்கத்தக்கது....என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்) 

........என்னது நான் எங்க போறேனா...? என்னோட ஷூ க்கு பாலிஸ் போடங்கண்ணா.......ஒரே தூசு...!


No comments:

Post a Comment