Friday, 24 May 2013

மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்..!

                        மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்..! 


                                      மாணவ சமுதாயத்தின் மன வளம் காப்போம்..! - கட்டுரை




சாலைகளில் செல்லும்போது சாலையோர விளம்பரப் பலகைகளைக் கவனித்திருப்பீர்கள் இவ்வாறு "வன வளம் பேணுவோம்,மழை பெறுவோம்" என்று ....இன்னும் சில நாட்களில் "நம் மன வளம் பேணுவோம் ,உயிர்களைக் காப்போம் " என்றும் விளம்பரப் பலகைகள் வைக்கப் படலாம்.ஏனெனில் மன நலம் என்பது இன்று நம்மிடையே காணாமல் போன பொருளாகிவிட்டது. 

அண்மையில் நடை பெற்ற இரு சம்பவங்கள் என் மனதை மிகவும் பாதித்தன. 
மாணவனின் இடுப்பு எலும்பை அடித்தே முறித்திட்ட ஆசிரியர் -ஒன்று 
கண்டித்த ஆசிரியையின் கழுத்தைத் துண்டித்த மாணவன் -இரண்டு 
என இரு வருந்தத் தக்க நிகழ்வுகள்.இவைகளே இக்கட்டுரை எழுதத் தூண்டிய காரணிகளாகும். 

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம் ......?எண்ணிப் பார்த்தோமா...? 

ஒழுக்கம் கற்பிக்கும் இடத்திற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை.ஒழுக்கம் கற்கும் இடத்திலேயே தவழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தானே உண்மை நிலை. 

குற்றம் யார் மீது என்று மூளையைக் குழப்பிக் கொண்டு வாதம் செய்ய வேண்டாம்.இனியேனும் இது போன்ற கொடுமைகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கி விடுவோம். 

மாணவர்களின் நலன் பேணும் வகையில் அமைந்த கீழ்க்காணும் ஆலோசனைகள் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல.மாறாக இவை அனைத்தும் முன்னோடி கல்வியாளர்களின் சிந்தனைகளாகும். 

1.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது தமது சுய விருப்பத்தை திணிப்பதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.உதாரணத்திற்கு மருத்துவர் பிள்ளை மருத்துவராகவும்,பொறியாளர் பிள்ளை பொறியாளராகவும் தான் வரவேண்டும் என விருப்பப் பட்டு அவ் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது.இவ்வாறு செய்யும் போது பிள்ளைகள் தாங்க வொண்ணா மனச்சுமைக்கு ஆளாகின்றனர்.அதனால் அவர்களின் இயல்பான மனதில் ஒரு இறுக்கம் நிறைந்து விடுகிறது.கடமைக்கு வேண்டி மட்டும் கல்வி பயில்வர்.அதில் அவர்களுக்கு கல்வித் தேர்ச்சி என்னவோ கிடைத்து விடும்.ஆனால் மன முதிர்ச்சி மற்றும் சுய ஆளுமைப் பண்புகளின் வளர்ச்சி தடைப்பட்டு விடும்.எனவே பெற்றோர் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்க முற்பட வேண்டாம். 

2.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழு நேரமும் வேலைப் பளுவில் ஆழ்த்த வேண்டாம்.உதாரணத்திற்கு காலை முதல் மாலை வரை பள்ளி,பின்னர் தனிப் பயிற்சி ,பின்னர் நாட்டியம் பின்னர் பாடல் பின்னர் மீண்டும் படிப்பு என்று அவர்கள் உறங்கும் வரையிலும் அவர்களின் மீது தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்றுவது.இதனால் அவர்கள் உடல் மட்டுமல்ல உள்ளமும் சேர்ந்தே சோர்வடைந்து விடுகிறது.எனவே பெற்றோர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்,பிள்ளைகளுக்கு தேவையான அவசியமான ஒய்விற்கென நேரம் கொடுக்க வேண்டும். 

3.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஒய்வு மற்றும் விடுமுறை நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கத் தூண்ட வேண்டும்.அதே சமயம் அவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்த கணினி,இணைய மற்றும் தொலைக்காட்சி விளையாட்டுக்களை விளையாடுவதை நிறுத்தச் செய்து தம் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளில் வரும் பொம்மைப் படங்களிலும் தற்போது வன்முறைக் காட்சிகள் அதிகம் காட்டப் படுவதால் அவைகளைப் பார்ப்பதை விட்டும் பிள்ளைகளைத் தடுக்க வேண்டும். 

4.பெற்றோர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகளின் கைகளில் அலைபேசிகள் தருவதை நிறுத்த வேண்டும்.பள்ளி நிர்வாகங்கள் இது விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

5.பள்ளிகள் தங்கள் மாணவர்களை அடிமைகள் போல் நடத்தும் போக்கு முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.நூற்றுக்கு நூறு விழுக்காடு கல்வித் தேர்ச்சி மட்டும் பள்ளிகளின் குறிக்கோளாக இருக்கக் கூடாது.மாறாக தங்கள் மாணவர்கள் மாண்புயர் பண்புகளிலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவதையும் நோக்கமாகக் கொள்ளவேண்டும். 

6.பள்ளிகளில் மாணவர்களை அளவுக்கு மீறி தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கொடுக்கப் படும் தண்டனை அவர்களை மனம் திருந்தச் செய்யும் படியாக மட்டுமே இருக்க வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு மன நலம் வளர்க்கும் நீதி போதனை வகுப்புகள்,யோகாசனப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.இதுபோன்ற வகுப்புகளை ரத்து செய்து அவைகளிலும் மற்ற பாடங்கள் நடத்தும் போக்கைக் கைவிட வேண்டும்.ஏனெனில் நீதி போதனைகள் மற்றும் யோகாசனப் பயிற்சிகள் மட்டுமே மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் மன வளம் வளர்க்கக் கூடியவை என்பதை பள்ளி நிர்வாகங்கள் புரிந்துணர வேண்டும். 

7.மாணவர் ,ஆசிரியர் மற்றும் பெற்றோர் நல்லுறவு பேணப் பட வேண்டும்.பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இதை உறுதி செய்திட வேண்டும். 

8.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் ஆசிரியர்களை மதித்து நடக்கும் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும். 

9.ஆசிரியர்களும் மாணவர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போல் 
கருதி அவர்களிடத்தில் கனிவுடன் நடந்திட வேண்டும். 

10.மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தயவு செய்து தற்போதைய கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யப் பட வேண்டும்.பாடப் புத்தகங்களில் உள்ளதை மனப்பாடமாக்கி (மூளையில் திணித்து ) அதனை தேர்வுத் தாள்களில் வாந்தி எடுக்கச் செய்து அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிப்பதை நிறுத்திடல் வேண்டும்.மாறாக அவர்தம் புரிதல் திறன், வெளிப்படுத்தும் ஆற்றல் போன்றவைகளை ஆய்வு செய்யும் விதத்தில் கல்வி முறை மாற்றப் பட வேண்டும். 

சம்பந்தப்பட்ட சான்றோர் சமுதாயம் இதுகுறித்து சிந்திக்குமா ?......மாணவ சமுதாயம் நல்ல மாற்றங்களைச் சந்திக்குமா....?


Monday, 13 May 2013

லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள்


லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள் 




                     லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள் - கட்டுரை



லஞ்சம் மற்றும் ஊழலுக்கான சமூகக் காரணங்கள் 

செந்நீரும் கண்ணீரும் சிந்தி நம் தலைவர்கள் பெற்றுத் தந்த இந்திய சுதந்திரத்தை கரையான்களாய் அரித்துக் கொண்டிருக்கிறது லஞ்சமும் ஊழலும். சமீப காலமாக லஞ்சம் வாங்கி அல்லது ஊழல் செய்து கைதாபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கான செய்திகள் தினசரிகளில் வந்த வண்ணமாகவே உள்ளது. அதைப் படிக்கும் அல்லது கேட்கும் ஒவ்வொருவருக்கும் அன்றைய விவாதப் பொருளாக மட்டுமே காணப்படுகிறது. லஞ்சம் வாங்குவதை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமெனில் லஞ்சம் கொடுத்து அவற்றை முடித்துக் கொள்கின்றனர். லஞ்சம் என்பது வாங்குபவர்களுக்கு மட்டும் இழுக்கான செயல் அல்ல. அதைக் கொடுப்பவர்களுக்குமே. அரசு நிறுவனங்களில் மட்டும் காணப்பட்ட லஞ்சமும் ஊழலும் இன்று தனியார் நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. செற்ப பணத்தில் ஆரம்பித்த லஞசமும் ஊழலும் இன்று லட்சம் கோடிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பற்றி பேசும் பொழுது நமக்கு ஞாபகத்தில் வருபவர்கள் அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களுமே. ஆனால் அதை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னலமும், தப்பித்துக் கொள்ளுதலிலுமே லஞ்சமும் ஊழலும் ஒழிந்துகொண்டிருக்கிறது. 



லஞ்சம் மற்றும் ஊழலுக்கான அடிப்படைக் காரணங்கள்: 



அடிப்படையான காரணங்களை ஆராயும் போது பண ஆசையும், தன்னலமே மேலோங்கி நிற்கிறது. ' பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது ' என புனித பைபிள் குறிப்பிடப்படுகிறது. இன்று உலகளாவிய பல பிரச்சனைகளுக்கு பண ஆசையே காரணமாய் உள்ளது. பண ஆசையின் ஆணிவேர் என்னவென்று ஆராயும்பொழுது இன்று சமூகத்தில் மனிதனின் மதிப்பீடு அவன் வைத்திருக்கும் பணம் மற்றும் சொத்துகளின் அடிப்படையில் தான் என்ற இழிந்த நிலை காணப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒழிந்துள்ள தன்னலம், அவர்களை நேர்மையானவர்களாக இல்லாமலும் பொது நோக்கம் அற்றவர்களாகவும் மாற்றுகிறது. பண ஆசையும் தன்னலமும் இன்று குழந்தைகளுக்குள்ளும் இலைமறைக் காயாய் திணிக்கப்படுகிறது என்பதும்இ இதன் விளைவு பெரியது என்பதும் உலகறிந்த உண்மை. 



சமூகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலின் தாக்கம்: 

லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்க்கும் நேர்மையானவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் பிழைக்கத் தெரியாதவன். இன்று ஒரு இளைஞனுக்கு பெண் கொடுக்க நிpனைப்பவர்கள் கூட எத்துறையி;ல் ஊதியத்தை விட கையூட்டு அதிகம் கிடைக்கும்இ அத்துறையில் பணியாற்றுகிறார்களா என்று பார்க்கும் அளவிற்கு சமூகத்தாக்கம் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. 
சமீபத்தில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட ஒரு அரசு ஊழியரை கீழ்கோர்ட் தண்டித்து அதை பஞ்சாப் உயர்நீதிமன்றம் ரத்து செய்து அவரை விடுதலை செய்தது. அதன் மீதான அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் டி.எஸ்.தாக்குர் ஆகியோர் லஞ்சத்தை அதிகாரப் பூர்வமாக ஆக்கித் தொலையுங்கள் என்று வெறுப்பில் சொல்லியிருக்கிறார்கள். நாட்டின் மனசாட்சி என வர்ணிக்கும் நீதித்துறையிலே இந்த தாக்கம் என்றால் பிற துறைகளை பற்றி கூறவே வேண்டாம். 


டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊழல்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. மேலும் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் - ன் அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று ' சூப்பர் பவர் ' என்ற நிலையை எட்டுவதற்கு வளர்ச்சியும் வாய்ப்பும் இந்தியாவிற்கு இருக்கிறது. எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழலும் மோசமான சமூகப் பிரச்சனைகளும் இந்திய ' சூப்பர் பவர் ' நாடாக ஆகவிடாமல் தடுக்கிறது என்று கூறியுள்ளது. 
இதைக் காணும் போது ' பரிதானம் (லஞ்சம்) ஞானிகளின் கண்களை குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்கும்' என்ற புனித பைபிளின் வார்த்தைகள் தான் நம் நினைவிற்கு வருகிறது. 


முடிவாக, இன்று லஞ்சம் கொடுக்காமல் சமூக வாழ்வில் பயணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இந்நிலை மாற வேண்டும். முதலில் நம்மை நாம் மாற்றிக்கொண்டு, பிறகு நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இது ஒரே நாளில் மாறிவிடாது. மேலும் பணத்தினால் மனிதனை மதிப்பிடும் இழிந்த நிலையை மாற்ற வேண்டும். சக மனிதர்களை பற்றிய அக்கறை சமத்துவம் போன்ற மதிப்பீடுகள் வளர வேண்டும். ஊழல் ஒழிப்புத் துறை ஆட்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அது ஒரு தன்னாட்சி துறையாக மாற வேண்டும். மக்கள் பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்ச்சியும், அறிவும் பெற வேண்டும். தன்னலமற்ற பொதுநலம் காக்க வேண்டும்.


புற்று நோய் தடுக்கும் தூதுவளை


                       புற்று நோய் தடுக்கும் 


                     



புற்று நோய் தடுக்கும் தூதுவளை 



தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் தொண்டை புற்று , கருப்பை புற்று, வாய் புற்று ஆகியவற்றுக்கு தூதுவளை நல்ல பலனைக் கொடுத்துள்ளது.புற்று நோய் ஆரம்ப நிலையிலே கண்டால் தூதுவளையை பயன்படுத்துவதன மூலம் சில மாதங்களிலே பூரண குணம் அடையலாம் . 

தூதுவளை நெய்யை 1,2 தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் எலும்புருக்கி நோய் ஈளை இருமல்,கபநோய்,மேக நோய்,வெப்பு நோய், இரைப்பு,இளைப்பு இருமல்,வாய்வு,குண்டல் வாயு ஆகியவை தீரும். காயை உலர்த்தித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய் தீரும். அலர்ஜி நீங்கும். வாயு தொந்தரவு தீரும் .


Saturday, 11 May 2013

இந்தியருக்கு நோபல் பரிசு?


இந்தியருக்கு நோபல் பரிசு? --- இனி எப்போது கிடைக்கும்???? 




                                            


ஒவ்வொரு வருடமும் நோபல்பரிசு அறிவிக்கப்படும் போதெல்லாம். இந்தியர் எவருக்கேனும் அறிவிக்கப்படுமா என இந்தியாவே எதிர்பார்க்கும். வழக்கம்போல் ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை இந்தியாவில் நோபல்பரிசு பெற்றவர்கள் என்று பார்த்தால் 8 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் உண்மையான இந்தியர் அதாவது இந்திய குடியுரிமையை கொண்டவர்கள் என்று பார்த்தோமானால், ரவீந்திரநாத் தாகூர் (1913), சர்சி.வி.ராமன் (1930), அன்னை தெராசா (1979), டாக்டர் அமர்த்தியா சென் (1998) ஆகியோர் ஆவர். மீதியுள்ளவர்கள் ஹர்கோவிந்த் குரானா (1968), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வி.எஸ்.நெயில்பால் (2001), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆகியோர் இந்திய குடியுரிமையை துறந்தவர்கள். இந்திய வம்ச வழியினர் அவ்வளவுதான். 
 

இருந்தபோதிலும் இன்றைக்கு இந்தியாவில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கு ஏனோ ஆண்டுதோறும் நோபல் கமிட்டி பாராமுகம் காட்டிவருகிறது. இன்று இந்தியாவில் தலை சிறந்த விஞ்ஞானிகள் என்று எடுத்துக் கொண்டால் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்) ஆகியோர் உள்ளனர். இவர்களில் நோபல் பரிசுக்கு மிகவும் பொருத்தமானவர் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்) மட்டுமே. ஒவ்வொரு வருடமும் இவரின் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது. அதனாலேயே இவரை நோபல் கமிட்டி தேர்வு செய்ய மறுக் கின்றனர். இதற்காக இந்தியா எந்தவொரு முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை. பெரும்பாலும் இவர்மீது பல வேளாண் விஞ்ஞானிகள் சில புகார்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றை தெளிவுபடுத்தினால் இவரின் பரிந்துரையை நோபல் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என தெரிகிறது. முக்கிய புகார்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

இந்தியாவில் பிரபல சுற்றுச்சுழல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் (கோவ பவுன்டேஷன், இயக்குநர்) 1986, மார்ச் 23-இல் இல்லஸ் டிரேடட் வீக்லி (Illustrated weekly of India) இதழில் "மாபெரும் விதை கொள்ளை' (the Great Gene Robbery) என்ற கட்டுரை எழுதியுள்ளார். (பூவுலகு - 2009 ஜூன் மற்றும் ஜூலை இதழ்) அக்கட்டுரையில் உள்ள முக்கிய அம்சமானது. ((www.Swamiscaper. blogspot.comஇல் பார்க்கலாம்) 

"டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 1982-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக்குழு தலைவர் பதவியிலிருந்தும், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் (அதற்கு முன்னதாக வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவர்) விலகி, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகருக்கு அருகே உள்ள லாஸ் பேனோஸ் பகுதியில் இருக்கும் பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தாவினார். இங்கு தாவல் என்ற வார்த்தை நோக்கத்துடனேயே பயன்படுத்தப் படுகிறது. நாட்டின் உணவு என்ற மிக முக்கியமான துறையில் அரசின் அறிவியல் ரகசியங்களை அறிந்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவிய லாளரை, திடீரென ஒரு நாளில் அப்பதவியிலிருந்தும், நாட்டிலிருந்தும் வெளியேறி அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைவராக பதவி ஏற்பதற்கு, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் அனுமதிக்காது. பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்புடைய இரண்டு அறக்கட்டளைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி உணவை அவ்வளவாக உட்கொள்ளாத அமெரிக்கர்கள், ஆசியாவின் நெல் ஆராய்ச்சியைத் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக 1960-ஆம் ஆண்டு பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினர். 

இருபதாம் நூற்றாண்டின் எல்லையில் நிற்கும் நாம், நமது வாழ்க்கையை முடிவு செய்யும் முக்கிய உணவுப் பொருட்களான அரிசி மற்றும் கோதுமை ஆகியவை குறித்த ஆய்வுகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம்.எஸ்.சுவாமி நாதன் பதவி ஏற்றது - பலவிதங்களிலும் அவருக்கு பின்னடைவாகவும், பதவி இறக்கமாகவுமே இருந்தது. இந்தியாவின் பல்வேறு அறிவியல் துறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான அறிவியலாளர் களுக்கு தலைவராக இருந்த அவர், இந்தோனேஷியாவில் 200-க்கும் குறைவான அறிவியலாளர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கினார். இதற்கு பலனாக அவருக்கு கிடைத்தது: பணம்! வருமான வரி கட்டத் தேவையில்லாத பணம் மட்டுமே!! 

அமெரிக்க இயக்குநர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்த பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம், பூச்சித் தாக்குதல் காரணமாக உயர் விளைச்சல் தரும் பயிர்கள் விவகாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தது. எனவே, உயர் விளைச்சல் நெல்ரகங்களுக்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் எதிர்ப்புத் திறனை வழங்கக்கூடிய மரபணுக்களைக் கொண்ட மரபணு வங்கியை விரிவாக்குவது பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உடனடியாகத் தேவையாக இருந்தது. இந்தியாவில் ஏராளமான மரபணுக்களைக் கொண்ட பயிர் மரபணு வங்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக எம்.எஸ்.சுவாமி நாதன் நியமனம் செய்யப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், தலைசிறந்த அறிவியல் ஆய்வு மையம் அல்ல! இது தனியாரால் கட்டுப்படுத்தப்படும் சாதாரண ஆய்வு மையம்தான். இருந்தபோதிலும் சுவாமிநாதனை போன்ற ஒருவர் இதன் தலைவராவதை ஏற்பது கடினமே. இந்த பதவி வகிப்பவரின் அறிவியல் நிபுணத்துவத்தைவிட, காரியங்களை சாதிக்கும் செயல்பாட்டுத் திறனே மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படும். 

சிறந்த அறிவியல் பின்னணி கொண்ட யாரும் மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட், மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப இன்ஸ்டிடியூட், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் போன்ற எந்தவொரு நிறுவனத்திலும் இயக்குநராக நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக எவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் பணியமர்த்தப்பட்டார் என்று அறிவார்ந்த பிலிப்பைன்ஸ் மக்களை கேட்கிறேன். இக்கேள்வியின் உண்மையான பதில் மிகவும் நகைச்சுவையானதாகும். 

பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மூன்று பேர் விண்ணப்பித்தனர். முதலாமவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் துணைத்தலைவர். இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டால் மனைவியுடன், துணைவியையும் அழைத்து வருவதாக தெரிவித்தார். இரண்டாமவர் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் பெயருக்கு பின்னே போட்டுக் கொண்ட பட்டப்படிப்பை படிக்காதவர் என்று தேர்வின்போது தெரிய வந்தது. இந்த வரிசையில், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனம் பதிப்பித்த அறிவியல் மற்றும் எதிர்காலத்திற்கான 1979-ஆம் ஆண்டு புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் பிரபல "அறிவியல் மோசடியாளர்கள்' என்று பால் காம்மரெர் மற்றும் சிரில் பர்ட் ஆகியோருடன் இணைந்து குறிப்பிடப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.' 

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிரபல அறிவியல் மோசடியாளர் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாரா? என்பதுதான். இதற்காக சில இடங்களில் தேடி கண்டுபிடித்தோம். Year book of Science and the future, 1979' என்பது அந்த நூலின் பெயர். இந்த நூலை (Encyclopedia Britannica) ISBN - 0852293461 வெளியிடப் பட்டுள்ளது. 

இந்த நூலில் வந்த தகவல் அடுத்து இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் அன்று இந்த செய்தி பரபரப்பானது. இதை பற்றி இந்திய பாராளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மீது (1979 Year of Science and the future (Encyclopedia Britannica) தெரிவித்த அறிவியல் மோசடியாளர் என்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. (India Parliamentary debates : official report, volume 113, Issue 13 - Rajya sabha - 1980 - www.rsdebate.nic.in/browse-data) மேலும் இதே விஷயத்தை 'Bias in Scientific Rearch' என்ற கட்டுரையை பேராசிரியர் எமிரிடஸ் இயான் ஜேம்ஸ் ராபர்ட்ஸ் (லண்டன் பல்கலைக்கழகத்தில் மனோவியல் பேராசிரியர்) எழுதியுள்ளார். 

1967-ஆம் ஆண்டில் புதுடெல்லியில் நடந்த அறிவியலாளர் கருத்தரங்கு ஒன்றில், பாலுக்கு இணையான அளவில் புரதம் மற்றும் "லைசின்' எனப்படும் அமினோ அமிலம் கொண்ட புதிய ரக கோதுமையை தான் உருவாக்கி யுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் பெருமை யோடு அறிவித்தார். இந்தப் புதிய இரக கோதுமைக்கு "சர்பதி சோனாரா' (Sharbarti sonara) என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தார். (www.gmwatch) 

ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் இயங்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த உயிர்ம வேதியியல் விஞ்ஞானியான ஒய்.பி. குப்தா என்பவர் (இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் அறிவியலர் - IAR)) இப்புதிய இரக கோதுமை பற்றிக் கூறப்படும் தகவல்கள் பொய்யானவை மோசடித்தனமனவை என்று அப்போதே ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தினார். 

இதுதவிர, "சிமிட்' (CIMMYT - Central International de Mejoramiehto de Maizy Trigo) என்றழைக்கப்படும் மெக்சிகோவில் உள்ள கோதுமை மற்றும் மக்காச்சோள ஆய்வு நிறுவனம், சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு மோசடித்தனமானது என்று தனது ஆய்வுகளின் மூலம் 1969-ஆம் ஆண்டில் சுட்டி காட்டியது. இருப்பினும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் புதிய ரக கோதுமையைக் கண்டு பிடித்துள்ளதாகக் கூறி, எம்.எஸ்.சுவாமி நாதனுக்கு 1971-இல் மகசேசே விருது வழங்கப்பட்டது. 

மீண்டும் 1974-இல் "நியூ சயன்டிஸ்ட்' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், "ஸ்டேட்ஸ்மேன்' நாளேடு 1977, மே 17-ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகன் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. தான் தவறிழைத்துவிட்டதாக சுவாமிநாதன் ஒப்புக்கொண்டார். (new scientist, 2 september 1976- vol 71, No1016 weekly) இது எப்படி இருந்தாலும் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. ஆப்கானிஸ்தானத்தில் தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் (2009) சீனா நாட்டின் தேச துரோக குற்றம் சாட்டப் பட்ட லியூசியாபோவுக்கு அமைதிக்கான (2010) நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு தேர்வு செய்யப்பட்ட எலன் ஜான்சன் சர்லீஃப் மீதுகூட புகார் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் நோபல் பரிசுக்கு தகுதியானவரே. அதனால் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கும் நாளை எதிர்பார்க்கிறோம். 


தானத்தில் சிறந்தது உடல்தானம்


          தானத்தில் சிறந்தது உடல்தானம் 




                             





தானத்தில் சிறந்தது உடல்தானம் 
(கட்டுரை - கவிஞர் இரா.இரவி. 


இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மனித சமுதாயம். மருத்துவர்களான திரு.அசோகன், திருமதி. புஷ்பாஞ்சலி பெற்றோர்கள் தனது மகன் இதயந்திரனுக்கு விபத்தில் முளை மரணம் ஏற்பட்டவுடன் முடிவெடுத்து சிறுமி அபிராமிக்கு இதயத்தை தர சம்மதித்து வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்து இன்று அபிராமி உடல் நலம் பெற்று பேசுவதைக் கண்டு "எங்கள் மகன் இதயேந்திரன் சாகவில்லை அபிராமி உருவில் வாழ்கிறான்' என உருக்கமாக தெரிவித்தார்கள். 



சிறுமி அபிராமியின் தாய் மஞ்சுளா "எத்தனையோ கடவுள்களை வேண்டினோம் எந்தக் கடவுளும் உதவவில்லை. என் மகளின் உயிர்காத்த நீங்கள் தான் கடவுள்" என்று இதயேந்திரன் பெற்றோரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். மனிதநேயம் இன்னும் மறைந்துவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு. இந்த செய்தியினை படித்தோம், நெகிழ்ந்தோம், பாராட்டினோம் என்று இருந்து விடாமல். உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். ஒருவர் இறந்தவுடன் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயுக்கும், மண்ணிற்கும் இரையாகும் இந்த சடலத்தை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்குவதில் தவறு இல்லை. தசாவதாரம் புகழ் சாதனையாளர் கலைஞானி கமலகாசன் தனது உடலை தானமாக மருத்துவக்கல்லூரிக்கு வழங்க உள்ளார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற நற்பணிக்கு முன்வர வேண்டும். 



                                      



ரத்த தானம் தந்தால் விபத்தில் ரத்தம் இழந்தவருக்கு உயிர் காக்கும் மருந்தாக இந்த ரத்த தானம் உதவும். எனவே தயக்கமின்றி ரத்த தானம் வழங்கிட பொதுமக்கள் முன் வரவேண்டும். விழி தானம் நாம் எழுதி கொடுத்து விட்டால் மட்டும் போதாதது வந்து எடுத்துச் செல்வார்கள். 30 நிமிடங்களில் வேலை முடிந்துவிடும்.மற்ற இறுதிச் சடங்குகளை வழக்கம் போல செய்து கொள்ளலாம். 
கண் தானம் வழங்கினால் பார்வையற்ற இரண்டு நபர்களுக்கு பார்வை கிடைக்கின்றது. இறந்த பின்னும் இந்த உலகை ரசிக்கும் அறிய வாய்ப்பு. வீணாக தீயுக்கும்,மண்ணிற்க்கும் இரையாகும் விழிகளைத் தானம் செய்வோம், பார்வையற்று விழிகளுக்காக காத்து இருப்போர் நம் நாட்டில் பல்லாயிரம் பேர். விழிதானம் தந்துவிட்டால், உடலில் ஒர குறை இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற மடத்தனமாக முட நம்பிக்கை நம்மில் பலருக்கு உள்ளது. இந்த முட நம்பிக்கை அகற்றப்பட வேண்டும். 


பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் பார்வையற்ற சகோதரர்களின் இன்னல்களை பார்வையுள்ள நாம் பத்து நிமிடங்கள் கண்ணைக் கட்டி கொண்டு நடந்தால் துன்பத்தை உணர முடியும். எனவே "பார்வையற்ற சகோதரர்களுக்கு இறந்த பின் பார்வையாக இருப்பதைப் போன்ற நல்ல செயல் உலகில் எதுவுமில்லை" என்பதை அனைவரும் உணர்வோம்.மதுரை அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பார்வையற்ற எம்.பழனியப்பன் தலைமையில் 25பேர் ரத்ததானம் வழங்கி கண்தான விழிப்புணர்வு விதைத்தனர். 


விபத்தில் முளைச்சாவு நேர்ந்தால் இனி பிழைக்க வழி இல்லை என்பதை மருத்துவர் அறிவித்தால் உடன் உடல் தானம் தரும் துணிவான முடிவை எடுக்க முன் வர வேண்டும். பகுத்தறிவு பெற்ற இனம் மனித இனம். எனவே பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்து பிறருக்கு உதவும் மனித நேயத்தையுப் பெற வேண்டும். இதயேந்திரனின் இதயம் மட்டுமல்ல இரண்டு விழிகள்,இரண்டு சிறுநிரகம், கல்லீரல், எலும்புகள் என பல்வேறு உறுப்புகளை தானமாக வழங்கி உலக மனிதர்கள் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து இருக்கிறார்கள். முன் மாதிரியாக அவர்கள் செய்த அரிய செயலை எல்லோரும செய்யும் மனநிலை பெற வேண்டும். 


இறந்தவுடன் மருத்துவ ஆராச்சி மாணவர்களுக்கு உடலைத் தரும் உயர்ந்த முடிவுக்கும் மனித சமுதாயம் வர வேண்டும். இந்த ஆராய்ச்சியின் காரணமாக மனிதனின் இறப்பைக் கூட இல்லாது செய்யும் நிலை வரலாம். பிறப்பை தடுக்க விஞ்ஞானத்தால் கற்றோம். இறப்பையும் தடுக்க விஞ்ஞானத்தில் முடியும், முடியாதது உலகில் எதுவுமில்லை. மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மனித இனத்தின் உச்ச நிலைக்கு வளர நாம் எல்லோரும் சிந்தனையை செலவிடுவோம். விலை மதிப்பற்ற மனித உயிர்களைச் காப்போம் மனிதநேயம்போற்றுவோம். சாதிமத வெறிகளை மாய்ப்போம்.


Wednesday, 8 May 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் 



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் - கட்டுரை


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது 

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது 

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

3. புகை பிடித்தல் 

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் 

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 

5. மாசு நிறைந்த காற்று 

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். 

6.தூக்கமின்மை 

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது 

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது 

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது 

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

10. பேசாமல் இருப்பது 

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது





காலை உணவு குழந்தைகளுக்கு ...?


காலை உணவு குழந்தைகளுக்கு ...? 




காலை உணவு குழந்தைகளுக்கு ...? - கட்டுரை



காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் தான் பேச்சுத்திறனிலும் செயற்பாட்டு திறனிலும் முன்னணியில் நிற்கிறார்கள் என்பதுதான் சமீபகால 
ஆய்வுத்தகவல் ... 

இரவு உணவுக்கு பின் நீண்ட நேரத்துக்கு பின் சாப்பிடும் உணவு உடலுக்கு மட்டும் அல்ல மூளைக்கும் உதவுகிறது ... 

காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் .. 
காலை உணவு சாப்பிடாத குழந்தைகள் சிலரை அமெரிக்காவில் உள்ள பென்சினியாவில் ஸ்கூல் ஆப் நர்சிங் ஆய்வு செய்தது ..இதிலிருந்தே இந்த கண்டுபிடிப்பு உறுதியாக்கப்பட்டது ..! 

காலை உணவில் பெற்றோர் கூடியகவனத்தை 
செலுத்துவது குறைந்துகொண்டு வருகிறது 
பாஸ் பூட் உணவுகளையே அவசர அவசரமாக வாங்கி கொடுத்துவிடுகின்றனர் ...இவை நம்நாட்டுக்கு உகந்தவையல்ல ... 

காலை உணவில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக தேவையாகும்